திங்கள்

இலங்கை தமிழர் நிவாரணத்திற்காக ஷூக்களுக்கு பொலிஷ் செய்யும் தமிழக இளைஞர்


இலங்கைத் தமிழர் நிவாரணத்திற்காக, இளைஞர் ஒருவர் பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்து பாதணிகளை பொலிஷ் செய்து, நிதி திரட்டி வருகிறார். நெல்லையை சேர்ந்தவர் பாபுராஜ் (30). சமூக சேவைகள் செய்து வருகிறார். அண்மையில் சென்னை அருகே திருக்கழுக்குன்றத்தில் இதயேந்திரன் என்ற மாணவர் விபத்தில் சிக்கி இறந்தபோது அவரது இதயம், கண்கள் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்ததற்காக அவரது தந்தை டாக்டர் அசோகனுக்கு, நெல்லையில் பாராட்டி விருது வழங்கினார். இவர் இன்று காலையில் பாளையங்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்து அங்கு வருகிற பயணிகளின் ஷூக்களுக்கு பொலிஷ் செய்தார். அதற்கு கட்டணம் என்றில்லாமல் நன்கொடையாக எவ்வளவு தந்தாலும் வாங்கிக் கொள்கிறார். ஒரு வாரத்திற்கு இதே போல பாதணி பொலிஷ் செய்து இதன் மூலம் கிடக்கும் தொகையை, இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

ஞாயிறு

வங்கதேசத்தைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு பதிலடியாக இந்தக் கொடூர குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியிருக்கலாம்


அசாமில் சட்டவிரோதமாகக் குடியேறிவரும் வங்கதேச முஸ்லிம்களும், இந்திய அரசுக்கு எதிராக மறைமுகப் போர் நடத்திவரும் ஜிகாதி குழுக்களும் இணைந்து ஐ.எஸ்.ஐ. போன்ற நாசகார அமைப்புகளின் உதவியுடன் இக் கொடியசெயலை அரங்கேற்றியுள்ளன. “ஹர்கத்-உல்-ஜிகாதி-அல்-இஸ்லமி” (ஹ_ஜி) என்ற வங்கதேச பயங்கரவாத அமைப்பின் உதவியில் இச் செயல்நடந்துள்ளது என்று போலீஸார் கருதுகின்றனர். குண்டு வெடிப்புகளை நிகழ்த் தியவர்கள் "பேட்மேன்' என்;ற சங்கேத வார்த்தையைக் குறிப்பிட்டுள்ளனர். அதன்படி பார்த்தால் முதலில் பெங்களூர், பிறகு ஆமதாபாத், தில்லி, மணிப்பூர் இப்போது அசாம் ஆகிய ஊர்களில் குண்டுவைக்க திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது. இதில் எஞ்சியிரு ப்பது "என்' என்ற எழுத்து. இது நொய்டாவாகவோ (தில்லியை அடுத்து இருப்பது), நாகபுரி யாகவோ (மகாராஷ்டிரம்) நாகாலாந்தாகவோ இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. "பி.இ.-3' ரகம்: அசாமில் 4 ஊர்களில் வெடித்த குண்டுகளில் பயன் படுத்தப் பட்டிருப்பது ஆர்டிஎக்ஸ் ரக வெடி மருந்து மட்டும் அல்ல, அமெரிக்கா, ரஷியா போன்றவை ,ராணு வங்களில் பயன்படுத்தும் "பி.இ.-3' ரக வெடிமருந்து என்று தடயவியல் நிபுணர்கள் உறுதி செய்கின்றனர். அசாமில் இறந்தவர்களின் உடல்கள் கருத்தும் கருகியும் காணப்பட்டன. பி.இ. ரக வெடிமருந்துகள்தான் இந்த மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த குண்டுவெடிப்புகளுக்கு உல்ஃபா அமைப்பு காரணமோ என்ற சந்தேகம் முதலில் இருந்தது. உல்ஃபா இயக்கத் தையும் அதன் ஆயுதப் பிரிவையும் இராணுவமும் துணைநிலை இராணுவமும் கடுமையாக ஒடுக்கிவிட்டன. போதாக்குறைக்கு அதன் அமைப்பில் பிளவு ஏற்பட்டு எந்த விதத் தாக்குதலுக்கும் திறன்இன்றி அது பலமிழந்துவிட்டது. எனவே குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியவர்கள் உல்ஃபா அல்ல என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.



கடந்த செப்டம்பர் மாத மத்தியில் வங்கதேசத்திலிருந்து 15 பேர் கொண்ட தீவிரவாதிகள் கும்பல் இந்தியாவுக்குள் ஊடுருவப் போவதாக இராணுவத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தூப்ரி மாவட்டத்தில் ராணுவம் கண்காணித்துக்கொண்டிருந்தபோது 15 பேர் கொண்ட கும்பல் இந்திய எல்லைக்குள் வந்து கொண்டிருந்தது. இராணுவத்தினர் உடனே துப்பாக்கியால் சுட்டனர். அவர்களும் பதிலுக்குச் சுட்டனர். அந்தச் சண்டைக்குப்பிறகு கும்பலைச் சேர்ந்த 7பேர் அங்கேயேபிணமாகக் கிடந்தனர். மற்றவர்கள் இந்திய எல்லைக்குள் எங்கோ மறைந்துவிட்டனர். அவர்களை இராணுவத்தினரும் போலீஸாரும் தேடினர். ஆனால் அவர்கள் உள்ளூரில் யாருடைய துணையாலோ மறைந்து தப்பிவிட்டனர். வங்கதேசிகளை அடையாளம் கண்டு வெளியேற்ற வேண்டும் என்று அனைத்து அசாம் மாணவர் சங்கம் (ஆசு) கிளர்ச்சியைத் தொடங்கியது. இதைக் கண்டித்து முஸ்லிம் அமைப்புகள் கிளர்ச்சிகளை அறிவித்தன. வங்கதேசிகள் என்ற சாக்கில் ஆண்டாண்டு காலமாக வாழும் இந்திய முஸ்லிம்களை வெளியேற்றும் சதி இது என்று அவர்கள் கண்டித்தனர். அதே சமயம், சட்டவிரோதமாக அசாமில் தங்கியவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட 30 வங்கதேசிகளை வெளியேற்ற அசாம் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந் நிலையில் ஆகஸ்ட் 14-ம் தேதி முழு அடைப்புக்கு முஸ்லிம் அமைப்புகள் அழைப்புவிடுத்தன. உடால்குரி மாவட்டத்தின் ரொடா என்ற ஊரில் போடோ இனத்தைச் சேர்ந்த பழங்குடிகள் சிலர் வீதிகளில் வந்துகொண்டிருந்தனர். முழு அடைப்பு அறிவித்திருக்கும்போது வீதியில் எப்படி நடக்கலாம் என்று கேட்டு முஸ்லிம் அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் அவர்களைக் கத்தியால் குத்தினர். அதில் ஒருவர் இறந்தார், 3 பேர் படுகாயம் அடைந்தனர். அதையடுத்து போடோக்கள் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். அந்தக் கலவரத்தில் 55-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இக் கலவரத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது வங்கதேச முஸ்லிம்கள் என்பதால் வங்கதேசத்தைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு பதிலடியாக இந்தக் கொடூர குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியிருக்கலாம் என்று காவல்துறைத் தலைவர் ககன் சர்மா நிருபர்களிடம் தெரிவித்தார்.